ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-170, செட்டி தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை இன்று (அக். 04) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் அடையாறு மண்டலம், டி.எஸ்.ஆலந்தூர் சாலை மேம்பாலத்தின் அருகே, அடையாற்றில் மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, செட்டி தோட்டம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று கொசு ஒழிப்புப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், இந்த ஆய்வின்போது, பொதுமக்களுக்கு கொசுப்புழு வளரிடங்கள் குறித்தும், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர், அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சிப் பணியாளர்களுக்கு டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கி, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், பணியாளர்கள் நாள்தோறும் வீடுகளுக்குத் தவறாமல் சென்று நன்னீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, கொசுப்புழு உருவாகாத வண்ணம் அவற்றை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

“முதல்வரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக, கரோனா தொற்று நோய்ப் பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. தற்பொழுது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், கொசு ஒழிப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பல்வேறு காய்ச்சல்கள் நம்முடைய மாநிலத்துக்குப் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாநில எல்லைப் பகுதிகளில் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தேனி மாவட்டம் குமுளி, கோயம்புத்தூர் மாவட்டம் வாளையாறு, பொள்ளாச்சி மற்றும் தென்காசி மாவட்ட எல்லைப் பகுதிகளில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கொசு ஒழிப்புப் பணிகளான அபேட் போன்ற கொசு ஒழிப்பு மருந்துகள் தெளித்தல், நீர்நிலைகளில் கம்ஃபூசியா மீன்களின் மூலம் லார்வா நிலையிலேயே கொசுப் புழுக்களை அழித்தல் மற்றும் வீடுகளில் தேங்கும் நன்னீரிலிருந்து கொசுப் புழுக்கள் வளர்வதைத் தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில சுகாதாரத்துறையின் மூலம் இந்தப் பணிகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 14,833 புகை பரப்பும் இயந்திரங்கள், 78,250 லிட்டர் லார்வா ஒழிப்பு டெமிபாஸ் மருந்து, 83,520 லிட்டர் பைரித்திரம் மருந்து மற்றும் 13,644 லிட்டர் மாலத்தியான் மருந்து ஆகியவை தயார் நிலையில் கையிருப்பில் உள்ளன. டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஊரகப் பகுதிகளில் 13,909 பணியாளர்கள், நகர்ப்புறப் பகுதிகளில் 9,259 பணியாளர்கள் என, மொத்தம் 23,268 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் 3,589 களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களுக்கு நீர்நிலைகளில் கொசு மருந்து தெளித்தல், வீடுகள்தோறும் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளுதல், தெருக்கள் மற்றும் சாலைகளில் புகை மருந்து அடித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துல் ஆகிய 4 பணிகள் பிரதானமாக வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் சுமார் 7,757 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்விடங்களில் மாநகராட்சியின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேக்கம் இருப்பின் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 83,409 டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்தப் பரிசோதனைகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.