பெண் காவலர்களின் நலன் சார்ந்த 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக காவல் துறையில் 1973ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மார்ச் 17) நடைபெற்ற, தமிழக காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, ‘அவள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து, பெண் காவலர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

  1. ரோல் கால் என்ற காவல் வருகை அணிவகுப்பு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும்.
  2. சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
  3. அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வு அறை கட்டித் தரப்படும்.
  4. தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
  5. கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டு தோறும் வழங்கப்படும்.
  6. பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
  7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்.
  8. பெண் காவலர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண காவல் துறையில் பெண்கள் என்ற தேசிய மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும்.
  9. பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்.