நியாய விலைக் கடைகளிலும், சேமிப்புக் கிடங்களிலும் நடைபெறும் முறைகேட்டினை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

“அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் நியாய விலைக் கடைகளும், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவை முக்கியப் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக திகழும் இவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கியவுடன் அவர்களுடைய கைபேசிகளுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. ஆனால், வாங்கப்படாத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.

உதாரணத்திற்கு, குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களை வாங்க தகுதியுடையவர்களாக இருந்தாலும், பெரும்பாலானோர் ஓரிரு பொருட்களை மட்டும், குறிப்பாக சர்க்கரையைமட்டும் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஓரிரு பொருட்களை வாங்கிச் செல்பவர்களின் கைபேசிகளுக்கும் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொண்டதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதன் மூலம் அந்தப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்கள் அனுப்பப்படுவதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களின் ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் இரண்டு கிலோ எடை குறைவாக இருப்பதாகவும், அதாவது மாதா மாதம் பதினைந்தாயிரம் டன் தானியங்கள் குறைவாக விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

இது குறித்து உணவுத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் அனுப்பப்படுவதில்லை என்றும், ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் இரண்டு கிலோ எடை குறைவாக இருப்பதாகவும், இதைச் சரிகட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எடை குறைத்து பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுவதாகவும், இதற்குக் காரணம் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள்தான் என்றும் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

அதே சமயத்தில், இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி தெரிவிக்கையில், கிடங்குகளில் இருந்து சரியான அளவில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தான் தங்களின் தவறை மறைக்க கிடங்குகளின் மீது பழி போடுவதாக கூறுகிறார். இவற்றை தடுத்து நிறுத்தினாலே அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் பொருட்கள் கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளிலும், நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டினை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.