வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க, அருகில் உள்ள காவல் நிலையத்துடன் ஏடிஎம் அலாரத்தை இணைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்களை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதில் பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 51 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய டிஜிபி, அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

வங்கி, ஏடிஎம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக கேமராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்களை அனைத்து ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கொள்ளையர்களின் முகம் தெளிவாகத் தெரியும்வகையில், ஏடிஎம் மையங்களில் அதிநவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும், ரகசியக் கேமராக்களையும் பொருத்த வேண்டும் என்று டிஜிபி கூறினார். இவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக வங்கி அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.