தமிழ்நாட்டில் 38.25 இலட்சம் விவசாயிகள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து  பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்ட (பிஎம் கிசான்) பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட சிறப்பு முகாம் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. 24.04.2022  அன்று  நடக்கும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கூட்டப்பொருளாக பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம் மூலம் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத  பிஎம் கிசான்  திட்ட பயனாளிகளுக்கு விவசாயக் கடன் அட்டை வழங்கப்படும். விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ரூபாய் 1 இலட்சத்து 60 ஆயிரம் வரை பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும்,  உற்பத்திக்கு தேவையான நிதி உதவி பெறவும் முடியும். விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்கடன்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ. 3 இலட்சம் வரையிலும், மேலும் மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ. 2 இலட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெற முடியும்.

விவசாய கடன் அட்டை திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். இத்திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளின் நிலவரம்பைப் பொறுத்து மாறுபடும். விவசாய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மண்டல ஊரக வங்கிகள், கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம அளவில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் பெறலாம். விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு  விவசாய கடன் அட்டை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை கேட்டுக்கொள்கிறது.