சென்னை மாநகராட்சியின் 14 துறைகளுக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் கவனிக்கத்தக்க அம்சங்கள்: சென்னை மாநகராட்சியில் புதிய திட்டங்கள் மட்டும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் நிதியாண்டில் ரூ.2,510.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளுக்காக ரூ.36.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> கொசஸ்தலையார், கோவளம் பகுதி, விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1,235 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மாநில அரசிடமிருந்து பெறப்படும் மூலதன மானியம், சீர்மிகு நகர திட்ட நிதி மற்றும் அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்படவுள்ள நிதியின் புதிய பாலங்கள் கட்ட மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு ரூ.221.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

> சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளில் புதிய தெரு மின்விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணிகளுக்காக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

> தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை தூய்மைப் பணிக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல், குப்பை கொட்டும் கிடங்குகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.424.01 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணிக்கு தேவையான வாகனங்களை நிர்பயா திட்டம், மாநில இயற்கை பேரிடர் நிதி மற்றும் தூய்மை இந்தியா திட்ட நிதியின் கீழ் வாங்க ரூ.106 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

> சிங்கார சென்னை – 2.0 திட்டம், மண்டல அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், வார்டு மற்றும் மன்ற உறுப்பினர் அலுவலகங்கள் கட்டுதல், பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், வணிக வளாகங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு கட்டிட துறைக்கு ரூ.50.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

> பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான சாய்வு இருக்கைகள், ஆய்வுக்கூட உபகரணங்கள், கணினி சார்ந்த உபகரணங்கள், வலைதள அமைப்புகள் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.5.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பரிசோதனைக் கூடங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கொசு ஒழிப்பு பணிக்கான புகை பரப்பும் இயந்திரம் கொள்முதல் செய்ய ரூ.4.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> நவீனப்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக தேவைப்படும் அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் வாங்க ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

> தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதி, சீர்மிகு நகரத் திட்டம், சிட்டீஸ் திட்டம் மற்றும் பல பணிகளுக்காக ரூ.137 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

> திறந்த வெளி நிலங்களில் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களை அமைக்கும் பணிகளுக்காக ரூ.55.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மண்டலங்களில் பல்வேறு அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து ரூ.147 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

> மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு வார்டுக்கு ரூ. 35 லட்சம் என்ற அடிப்படையில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது 5 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேயர் சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.