அரண்மனை 3′ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டுமே கடும் உழைப்பைக் கொடுத்துப் படமாக்கியுள்ளார்கள்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த படம் ‘அரண்மனை 3’.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, விவேக், சாக்‌ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஆர்யாவுடன் நடித்துள்ளனர். முந்தைய 2 பாகங்களை விடப் பெரும் பொருட்செலவில் ‘அரண்மனை 3’ உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யப் படக்குழு தீர்மானித்துள்ளது. ‘அரண்மனை 3’ கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் அர்ப்பணிப்பில் பிரம்மாண்டமான அரங்கத்தை உருவாக்கி, படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.

அதில் 200 கலைஞர்கள் பங்கேற்க 16 நாட்கள் படமாக்கியுள்ளனர். கிளைமேக்ஸ் காட்சியின் கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே 6 மாதங்கள் நடைபெற்றன. ‘அரண்மனை 3’ படத்தின் ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், இசையமைப்பாளராக சத்யா, எடிட்டராக பென்னி ஆலிவர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.