வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்படவுள்ளன.

சென்னை மாநகராட்சியால் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தார்க்கலவை (Cold Mix) கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பருவமழை முடிவடைந்தவுடன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படவுள்ளன.

இதில் முதற்கட்டமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 51.75 கி.மீ., நீளமுள்ள 414 உட்புற சாலைகள் 29.71 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 23.99 கி.மீ., நீளமுள்ள 38 பேருந்து சாலைகள் 25.91 கோடி ரூபாய் என மொத்தம் 75.74 கி.மீ., நீளமுள்ள 452 சாலைகள் 55.62 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து 126.52 கி.மீ., நீளமுள்ள 705 உட்புற சாலைகள் 69.08 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரூ.1020 கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி 8 ஆயிரம் சாலைகளில் 1,700 நீளத்திற்கு ரூ.1,020 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.