கூடலூரை அடுத்த கோக்கால் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திவ்யாவை, உதகை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ளவர்கள் பரிந்துரை செய்தனர்.

ஆம்புலன்ஸ் மூலமாக உதகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஆகாச பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத கற்பூர மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் முயற்சி செய்தனர்.

இதற்கிடையில், இரவு 10.45 மணியளவில் கடுமையான பிரசவ வலியால் துடித்த திவ்யாவுக்கு அவசரகால மருத்துவ உதவியாளர் களான ரதீஷ், சதீஷ் ஆகிய இருவரும் பிரசவம் பார்க்க முடிவு எடுத்தனர்.

2 உயிர்களை காக்க வேண்டியதன் பொறுப்பை உணர்ந்து, பாதுகாப்பாக பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியுடன் திவ்யாவிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மீண்டும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு திவ்யாவை அழைத்துச் சென்றனர்.