மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் பொங்கி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று பகல் 11.30 மணிக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலை 5 மணிக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை கடந்த மாதம் 16-ம் தேதி எட்டியது. அன்றில் இருந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுவதும் உபரி நீராக அணையின் 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இன்று மாலை முதல் அணையின் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் கன அடியும், நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி என மொத்தம் விநாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120.06 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.56 டிஎம்சி-யாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, காவிரி ஆற்றில் தொடர்ந்து பொங்கி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் நீடித்துள்ளது.

மேட்டூர் அணை நீர் தேக்க பகுதிகளான பண்ணவாடி, செட்டிப்பட்டி பகுதிகளில் பரிசல் துறை போக்குவரத்து இன்று ஏழாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பூலாம்பட்டி – ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பூலாம்பட்டியில் உள்ள நீர் மின் கதவணையிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறை, நீர் வளத்துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து வெள்ளப்பெருக்கு பகுதிகளில் தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்க, செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் வளத்துறை அதிகாரிகள் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, ஆற்றில் நீர் வரத்து நிலவரங்களை கூர்ந்து கவனித்து, கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணைக்கு கூடுதலாக நீர் வரும் என நீர் வளத்துறை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதால், உபரி நீர் போக்கியான அணையின் 16 கண் மதகுகளை திறந்து விட பணியாளர்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.