சென்னை: தங்கம் விலை 3-வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

எனினும் வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் விலை 3-வது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4874-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38992-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42184-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து ரூ.71.10-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,100 ஆக உள்ளது.