அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதில் சில சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி நடப்பு 2022-23-ம் நிதியாண்டு 4-ம் காலாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.60 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிசான் விகாஸ் பத்திர சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கால வைப்பு நிதிக்கான (டேர்ம் டெபாசிட்) வட்டி விகிதம் ஓராண்டுக்கு 5.50 சதவீதத்தில் இருந்து 6.60 சதவீதமாகவும், இரண்டாண்டுக்கு 5.70 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாகவும், 3 ஆண்டுக்கு 5.80 சதவீதத்தில் இருந்து 6.90 சதவீதமாகவும், 5 ஆண்டுக்கு 6.70சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான (5 ஆண்டுகள்) வட்டி விகிதம் 6.80 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.70 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சேமிப்புக் கணக்கு, செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிபிஎஃப், தொடர் வைப்பு (ஆர்.டி.) ஆகிய திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை என சென்னை பொது அஞ்சலக முதன்மை அஞ்சல் அதிகாரி சு.பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.