இந்தியாவின் அன்றாட கரோனா பாதிப்பு மீண்டும் 3,500 என்ற அளவைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான கரோனா தொற்று விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,545 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 4,30,94,938 என்றளவில் உள்ளது. நாடு முழுவதும் 19,688 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,549 பேர் குணமடைந்தனர். இதுவரை 4,25,51,248 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 5,24,002 பேர் கரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,365 பேருக்கு தொற்று உறுதியானது. 15வது நாளாக டெல்லியில் அன்றாட பாதிப்பு 1,000ஐ கடந்து பதிவாகியுள்ளது. டெல்லியில் அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 6.5% என்றளவில் உள்ளது.

கரோனா மரணமும் சர்ச்சையும்: கடந்த ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2021 வரையில் இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம். இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலை காட்டிலும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம். மேலும் இந்த எண்ணிக்கை உலக அளவில் இதுவரையில் ஏற்பட்டுள்ள கரோனா உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.