இந்தியாவில் ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 134 நாட்களுக்குப் பின்னர் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,000- ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று  ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 10,300 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 ஆக உள்ளது. கரோனா தொற்றால் சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தலா ஒருவர், கேரளா மாநலத்தில் இருவர் என மொத்தம் 6 பேர் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 837 ஆக உள்ளது.

இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.