அக்டோபர் மாதம் இறுதி முதல் சீனாவில் கரோனா பரவல் வேகமெடுத்தது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சீனாவின் நிலைமை பிற உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்தது. மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ, பொருளாதாரம் சரியுமோ என்பன போன்ற கேள்விகள் எழுந்து வந்தன. அச்சம் கருதி, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனைகள் அவசியம் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. 2023-ஆம் ஆண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகி உள்ள நிலையில், சீனாவைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என மருத்து நிபுணர்கள் அறிவித்துள்ளனர். அவ்வாறான சூழலில் சீனாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

சீனாவும் கரோனா கட்டுப்பாடுகளும்.. – 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால், சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில்தான், சில வாரங்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

அதன் காரணமாக சீனா முழுவதும் கரோனா அதிகரித்தாலும் நெரிசல் மிக்க பகுதியாக கருதப்படும் பீஜிங், ஹாங்காங் போன்ற பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படவில்லை. மக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய எந்தத் தடையும் சீன அரசு இம்முறை விதிக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாளும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சீன மக்களும் பிற நாடுகளைபோல் கரோனாவுடன் வாழத் தயாராகி வருகின்றனர்.

சீனாவில் தீவிர கரோனா பரவலுக்கு காரணம் என்ன? – 2019-ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டத்திலிருந்து சீனா கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்ததை நாம் அனைவரும் அறிவோம். இதன் காரணமாக சீனாவின் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் கரோனா தொற்றால் குறைவான எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் பெருமளவும் பதிவாகவில்லை. தொடர் கட்டுப்பாடுகளால் மக்களுக்கு கரோனாவுக்கு எதிராக இயற்கையாகவே உருவாக்கும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகாமல் இருந்து வந்தது.