விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் கமல்ஹாசன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு விக்ரம் படம் ஓடினாலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் விறுவிறுப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் ரிப்பீட் ஆடியன்ஸ் இந்த படத்திற்கு அதிகம் உருவாகியுள்ளார்கள். 10 நாட்களை விக்ரம் திரைப்படம் கடந்துள்ள நிலையில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று விக்ரம் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பாராத வெற்றியை விக்ரம் திரைப்படம் கொடுத்ததால் நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் உற்சாகத்தில் இருக்கிறார். அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சில நிமிடங்கள் திரையில் தோன்றினாலும் சினிமா ரசிகர்களின் மனதில் சூர்யா இடம்பிடித்துவிட்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரோலக்ஸ் வாட்ச்சை கமல்ஹாசன் பரிசளித்தார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கமல்ஹாசன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசியலில் பலமுறை முதல்வர் ஸ்டாலினை கமல் விமர்சித்திருக்கும் நிலையில் இன்று இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அடுத்ததாக கமல் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.