நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக மாநில நிர்வாகியின் சகோதரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீலகிரி மாவட்ட போலீஸார், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட10 பேரை கைது செய்தனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கூடுதல் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மறு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை, இத்தனிப்படை போலீஸார் கோடநாடு வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி (பி.ஆர்.எஸ்) வளாகத்தில் உள்ள சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து, இவ்வழக்கு தொடர்பாக சந்தேகிக்கும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு தொடர்பாக அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில நிர்வாகியும், கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த மரப் பொருட்கள் வியாபாரியுமான சஜீவனின் சகோதரர் சுனில் என்பவரிடம் போலீஸார் இன்று (மே.6) விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து சுனிலிடம் இன்று காலை முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கூடலூர் சோதனைச்சாவடி அருகே இருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்தனர்.

 

 

அவர்களை விடுவிக்க சுனில் போலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன் பேரில் அவர்களும் அப்போது விடுவிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த சில நாட்களில் கோடநாடு சம்பவம் தொடர்பாக சுனில் விடுவிக்க வலியுறுத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர். எனவே அவர்களை விடுவிக்க சுனில் வலியுறுத்தியது ஏன்?, அவர்களுக்கும் சுனிலுக்கும் என்ன தொடர்பு?, சமீபத்தீல் சஜீவனிடம் விசாரித்தபோது அவர் தெரிவித்த தகவல்கள் உண்மையா? என்பது குறித்து சுனிலிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.