தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில், நீதிமன்றக் கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அறிமுகம் செய்தார். முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை அவர் வாழ்த்திப் பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”திமுக உறுப்பினர்கள், அமைச்சர்களுக்குக் கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளைக் குறிப்பிட்டு வணக்கம் செலுத்திப் பேசுவது முறையாக இருக்கும்.

கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின்போது திமுக எம்எல்ஏ ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட முதல்வர், ”தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று நேற்றே சொல்லி இருந்தேன். எனவே எதையும் அளவுடன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.