அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் குறித்தும், அதன் பரவல் பாதிப்பு குறித்தும் தொடர்்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டவுடன் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. ஆனால், தற்போது அமெரி்க்காவிலும் ஒமைக்ரான் புகுந்துவிட்டது.

அமெரிக்காவில் டெல்டா வைரஸின் பாதிப்பே இன்னும் முழுமையாகச் சரியாகாத நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் அந்தோனி பாஸி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த நபர் கடந்த மாதம் 22ம் தேதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து கலிபோர்னியாவுக்கு வந்தார். அவருக்கு ஒரு வாரத்துக்குப்பின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோனையில் கடந்த 29-ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர் இரு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டார், ஆனால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை. இருப்பினும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டாலும் அவருக்கு லேசானஅறிகுறிகள் காணப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருவோருக்கு பல்வேறு பயணக்க கட்டு்பபாடுகளையும், தடுப்பூசி செலுத்திய விவரம், கடந்த சில நாட்களுக்கு முந்தையபயண விவரம் உள்ளிட்டவற்றை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நிறுவனம் கோரியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் நடவடிக்கை தடுப்பு நடவடிக்கைதான். இன்னும் இந்த புதிய வைரஸ் குறித்து அதிகமாக அறிய வேண்டும், முறையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஆதலால், அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தவிர்க்க முடியாதது. இந்த வைரஸ் மிகவும் மோசமானதாக, பாதிப்பு அதிகமாக ஏற்படுத்துமா, டெல்டா வைரஸைப் போன்று செயல்படுமா, மக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள், உயிரிழப்பு அதிகரிக்குமா என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இந்த வைரஸ் குறித்து முழுமையான தகவல்களைப் பெற இன்னும் குறைந்தபட்சம் 2 வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை தேவைப்படும். இந்த வைரஸின் மாதிரிகளை ஆய்வகங்களில் வளர்த்து அதன்பின்புதான் பாதிப்புகளை கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தனர்.