நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுஉறுப்பினர்கள் பதவிக்கு அதிமுகசார்பில் 1,343 பேர் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 31 இடங்கள் மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தென் சென்னையில் மாவட்ட மகளிரணி துணைச் செயலரான திருநங்கை என்.ஜெயதேவி, 113-வது வார்டில் முதல்முறையாக போட்டியிடுகிறார். இதேபோல, கூட்டணிக் கட்சியான சமூக சமத்துவப் படையின் நிறுவனத் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சிவகாமி 99-வது வார்டில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

சென்னை மாநகராட்சியில் முன்னாள் எம்எல்ஏ வி.அலெக்சாண்டர், திருப்பூரில் முன்னாள் எம்எல்ஏஎஸ்.குணசேகரன், ஓசூர் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகின்றனர்.

அதேபோல, சென்னையில் 8 முன்னாள் கவுன்சிலர்கள், திருப்பூரில் 12 பேர், திண்டுக்கல்லில் 6 பேர், வேலூரில் 2 பேர், திருச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா ஒருவர் என 30 பேருக்கு மீண்டும் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.

ஓசூர் (45), ஆவடி (48), மதுரை(100), கும்பகோணம் (48), தூத்துக்குடி (60), திருநெல்வேலி (55),ஈரோடு (60), சிவகாசி (48) மாநகராட்சிகளில் அனைத்து இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

அதிமுக வேட்பாளர்களில் 278 பேர் பட்டதாரிகள். இவர்களில் 163பேர் இளநிலைப் பட்டம், 17 பேர்பொறியியல் பட்டம், 74 பேர் முதுநிலைப் பட்டம், 4 பேர் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள். குறிப்பாக,ஆவடி மாநகராட்சி 14-வது வார்டில்மருத்துவத் துறையில் முதுநிலைப்பட்டம் பெற்ற டாக்டர் ஜி.ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதேபோல, டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளைப் படித்த 19 பேரும் போட்டியிடுகின்றனர்.