இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுதான் கடந்த 2021 ஜனவரி 07 முதல் 11 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. போட்டியை சமன் செய்திருந்தது. அதற்கு முக்கியக் காரணம் பந்த், புஜாரா, அஸ்வின் – விஹாரி இடையிலான கூட்டணி.

இந்தப் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி 138 ஓவர்களில் 407 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்தியா 98 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ரஹானே தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ரிஷப் பந்த் மற்றும் புஜாராவும் இணைந்து 148 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பந்த் 97 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும். புஜாரா, 205 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் எடுத்தார்.

அஸ்வின் – விஹாரி கூட்டணி: இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்திருந்தது. அப்போது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிய 40 ஓவர்களுக்கு மேல் இருந்தது. அந்த சூழலில் இணைந்த அஸ்வினும், விஹாரியும் ஆஸ்திரேலிய அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சை சமாளித்து ஆடினர். மொத்தம் 258 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இறுதிவரை விக்கெட்டை இழக்கவில்லை. அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். விஹாரி 161 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் ஆட்டம் சமனில் முடிந்தது. அப்போது தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. பின்னர் காபாவில் நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரையும் 2-1 என வென்று வரலாறு படைத்தது.