சென்னை: “ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2014-ம் ஆண்டில் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பிலிருந்து காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை,உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.ஆனால், அவர் வீட்டை இந்த ஆண்டுதான் காலி செய்திருந்தார்.

எனவே அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் “ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வரும் கூட்டங்கள் நடத்தியுள்ளார்.இதுபோன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறை குடியிருப்புகளில் அனுமதியை மீறி வசிப்பவர்கள் குறித்த விவரங்களை கண்டறிய டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று கூறப்பட்டது.

அப்போது நீதிபதி, “முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித்தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பபெற வேண்டும். அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்படுவது அழிவுக்கு கொண்டு செல்லும்.

அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற செயல்கள் குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். ஊரில் உள்ள வாகனங்களின் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றும் நடவடிக்கை எடுத்துவிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது. ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலர்களை திரும்பப்பெற வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு அளித்த விளக்கம் திருப்தியளிக்கிறது” எனக்கூறி, அடுத்தக்கட்ட விசாரணைக்காக வழக்கை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.