அகிலேஷ்சிங், முலாயம்சிங் உள்ளிட்ட சமாஜ்வாதி தலைவர்கள் தமது அடையாளமாக அணியும் சிகப்பு தொப்பிகள் பிரபலாகின்றன. இதற்கு, அதன் மீது பாஜகவினர் செய்யும் விமர்சனங்கள் எதிர்வினையாகி பலன் அளிப்பது காரணமாகி விட்டது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் தம் மேடைகளில் சமாஜ்வாதி தலைவர்களை விமர்சிப்பது தவிர்க்க முடியாதது. இதில் அக்கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் மற்றும் தலைவர் அகிலேஷ்சிங் உள்ளிட்ட சமாஜ்வாதி தலைவர்கள் கூட்டங்களின் போது அணியும் சிகப்பு தொப்பி முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் மீது பாஜகவின் தலைவர்கள், ‘சிகப்பு தொப்பி என்பது உபிக்கு ஆபத்தானது’, ‘குண்டர்கள் தான் சிகப்பு தொப்பிகளை அணிகிறார்கள்’, என்பது போன்ற விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்த விமர்சனப் பேச்சுக்களின் பதிவுகள், உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக்கானத் தேர்தல் பிரச்சாரத்தில் சமூகவலைதளங்களிலும் பரவி வைரலாகி வருகின்றன.

இதை தனக்கு சாதகமாக சமாஜ்வாதியினர் பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரங்களின் போது சிகப்பு தொப்பிகளை தவறாமல் அணியத் துவங்கி விட்டனர்.

மற்ற சமயங்களிலும் தமது ஆதரவு சமாஜ்வாதிக்கு என்பதை உணர்த்தும் வகையில் சிகப்பு தொப்பி அணிவது வழக்கமாகி விட்டது. இவற்றை அணியாதவர்களும் தற்போது அதை அணிந்துகொண்டு சிகப்பு தொப்பிகளை தங்கள் அடையாளமாக்கி கொண்டனர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சமாஜ்வாதியின் உ.பி. மாநில செய்தி தொடர்பாளர் சுனில்சிங் கூறும்போது, ‘‘இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் சாலைகள் முதல் சந்துகள் வரை சிகப்பு தொப்பிகளை பார்க்க முடிகிறது.

இதற்கு பாஜகவின் பிரச்சாரம் எதிர்வினையாகச் செயல்படுவது காரணம். இதன் காரணமாக, உத்தரப் பிரததேசத்தின் சிகப்பு தொப்பிகள் பிரபலமாகி அவைகளுக்கு சந்தைகளிலும் தடுப்பாடுகள் உருவாகி விட்டன.’’ எனத் தெரிவித்தார்.

கரோனா பரவல் காரணமாக இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் நேரடிப் பிரச்சாரங்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால், வழக்கமாக தேர்தலின் போது விற்பனையாகும் கொடிகள், பதாகைகள் உள்ளிட்டப் பிரச்சார சாதனங்கள் தேக்கமடைந்துள்ளன.

எனினும், பிரதமர் நரேந்தர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் கடுமையான விமர்சனங்களால் சிகப்புத் தொப்பிகள் மட்டும் அதிகமாக விற்பனையாகின்றன. இதன் பலன், சமாஜ்வாதிக்கு கிடைக்குமா என்பது மார்ச் 10 வெளியாகும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை முடிவுகளில் தெரியும்.