அண்மையில் ஸ்வீட் கார்ன் விற்பனையாளர் ஒருவர் தன் கைவசம் இருக்கும் கரண்டி மற்றும் பக்கத்தில் இருந்த பாத்திரங்களை கொண்டு தாளம் வாசித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையவெளியில் வைரலாகி உள்ளது. இது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதை பகிர்ந்து, அந்த சோள விற்பனையாளரை அவர் புகழ்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்று விடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.

அந்த வகையில், அண்மையில் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். “இந்த ஜென்டில்மேன் எங்கு வேலை செய்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், பெங்களூரில் நடைபெற உள்ள ‘மஹிந்திரா பெர்குஷன்’ விழாவில் அவர் கௌரவ விருந்தினராக பங்கேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். தாளம் இந்தியாவின் இதயத்துடிப்பு என்பதற்கு வாழும் உதாரணமாக இந்த நபர் திகழ்கிறார்” என அந்த பதிவில் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

38 நொடிகள் ரன் டைம் கொண்ட அந்த வீடியோவில் சோளத்தில் ருசிக்காக சில மசாலாக்களை சேர்க்கிறார் அந்த விற்பனையாளர். அதன்போது அவர் தன் வசம் உள்ள கரண்டி மற்றும் அருகில் உள்ள பாத்திரங்களைக் கொண்டு தாளம் வாசித்தபடி இந்தப் பணியை செய்கிறார். அதுதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 3.4 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.