வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளதால் மண்டபத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.

தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் புவனேசுவருக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து ஒடிசா மாநில கடற்பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று பிற்பகல் முதல் தமிழகத்தில் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது. மேலும் வங்கக்கடல் ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 8-வது நாளாக சூறாவளி காற்று வீசி வருவதால் நேற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.