மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழகஇளைஞர்கள் அதிக அளவில் வர வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’ என்ற திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடிதொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கிய நிகழ்வு, திருச்சியிலுள்ள தனியார் விடுதியில் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இங்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்கலந்துகொண்டு, உள்துறை, ரயில்வே, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 129 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ெடல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றிய பின்னர் பேசியபோது, ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதன்படி, கடந்த அக்.22-ம் தேதி 75,000 பேருக்கும், நவ.22-ம்தேதி 71,000 பேருக்கும் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். தற்போது 3-வது கட்டமாக நாடு முழுவதும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இதுபோன்ற பணிஆணைகளை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசு பணிகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக அளவில் வரவேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில், சுங்கத் துறை முதன்மை ஆணையர் ஜானே நாதனியன், திருச்சி மண்டல ஆணையர் அனில், இணை ஆணையர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.