இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் நிறுவப்பட்டுள்ள 59 அடி உயர நினைவுத் தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழக பொதுப்பணித் துறை சார்பில் ரூ.1.94 கோடியில் சென்னைநேப்பியர் பாலம் அருகே காமராஜர் சாலை – சிவானந்தா சாலை சந்திப்பில் நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் 10 நாளில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இத்தூண் திறப்புவிழா நேற்று நடந்தது. விழாவுக்குவந்த முதல்வருக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் புத்தகம் வழங்கிவரவேற்றனர்.

பின்னர் 59 அடி உயரநினைவுத் தூணை முதல்வர் திறந்துவைத்தார்.

ஈபிள் டவர் போல..

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் போன்றவடிவமைப்பில் கம்பீரமாக கட்டப்பட்டுள்ள நினைவுத் தூணை முதல்வர் பார்வையிட்டார். அங்குள்ள அரங்கில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கினர்.

நினைவுத் தூணின் உச்சியில் 4 சிங்கமுகம் அமைக்கப்பட்டு, அதன்மீது அசோக சக்கரம் நிறுவப்பட்டுள்ளது.

நினைவுத் தூணைச் சுற்றி 4 வீரர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவுத் தூணைச்சுற்றி சிறிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நினைவுத் தூண் குறித்துசுதந்திர தின உரையில் பேசியமுதல்வர் ஸ்டாலின், “இந்ததூண் வெறும் கல்லாலும், சிமென்ட்டாலும், செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல. நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்களின் ரத்தம்,எலும்பு, சதையால் உருவானதாகும்’’ என்று குறிப்பிட்டார்.