மாணவர்கள் தைரியமாக தேர்வு எழுத வேண்டும் என்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதன்படி சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையத்திற்கு சென்று மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,” மாணவர்கள் தைரியமாகத் தேர்வு எழுதுங்கள். பதற்ற பட வேண்டாம். மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். ஜூலை இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் எங்களின் பணி இருக்கும்” என்று தெரிவித்தார்.