கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்றைய (ஜூன் 15) நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 11,805 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 23,78,298 ஆக உயர்ந்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1,25,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் 30,068 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 267 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஜூன் 14 முதல் வரும் 21-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் சலூன் கடைகள், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீதப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீத நகரப் பேருந்துகளை மாவட்டத்துக்குள் மட்டும் இயக்குவது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல் கட்டமாக, 50 சதவீதப் பேருந்துகள், 50% பயணிகளுடன் இந்த வார இறுதி முதல் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.