கரோனா தாக்கத்தால் தெற்கு ரயில்வேயில் இதுவரை 60-க்கும்மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ன.

கரோனா அச்சத்தால் பயணிகள்வருகை குறைவாக இருப்பதாலும், கரோனா பரவலை தடுக்கும் வகையிலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை இயக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னையில் இருந்து கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, நாகர்கோவில் பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் அரக்கோணம் – ஜோலார்பேட்டை, மேட்டுபாளையம் – கோயம்புத்தூர், சென்னை எழும்பூர் – புதுச்சேரி உட்பட 9 இணை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, நிஜாமுதீன் – சென்னை சென்ட்ரல் (02433/02434) ராஜ்தானி சிறப்பு ரயில்கள் வரும் 12-ம் தேதி முதலும், பிட்ராகுண்டா – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் (07237/07238) இன்று முதல் 31-ம் தேதி வரையிலும் ரத்துசெய்யப்படுகின்றன. அகமதாபாத் – சென்னை சென்ட்ரல் (09220/09219) சிறப்பு ரயில்கள் வரும் 10-ம்தேதி முதலும், காந்திதாம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் (09424/09423) வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி – போர்பந்தர் (09262/09261) சிறப்பு ரயில்கள் வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி – இந்தூர் (09332/09331) சிறப்பு ரயில்கள் வரும் 11-ம் தேதி முதலும் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன.

ரத்தாகும் ரயில்களுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதுகுறித்து ரயில்வே அதிகாரிகள்கூறியபோது, ‘‘இணையதளம்வழியாக முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் திரும்ப வந்துவிடும். பயணிகள் டிக்கெட் பயண நாளில் இருந்து அடுத்த 6 மாதங்கள் வரைகட்டணத்தை திரும்பி பெறலாம் என்பதால், முன்பதிவு மையங்களில் நெரிசலை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.