அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதும் வகையில் கேள்விகள் மாற்றி அமைத்து தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற செமஸ்டர் தேர்வில் ஆன்லைன் மூலமாக ஒரு வரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யோக வினாத்தாள் உருவாக்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. கரோனா இரண்டாம் அலை பரவல் தாக்கம் அதிகம் உள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடைபெறுவது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கரோனா முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது கடந்த முறை நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு ஆன்-லைன் வழியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.

இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் தேர்வு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆன்லைனில் தேர்வு நடைபெறும் மாணவர்கள் இந்த தேர்வை புத்தகத்தைப் பார்த்த எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல் மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது.

அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம் அதேபோன்று தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.