மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு எழுத இலங்கை அகதி மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு இலங்கை அகதி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பழ.நெடுமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் பலர் தமிழ்நாட்டிலேயே பிறந்தவர்கள் ஆவர். இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பிய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் குறிப்பிட்ட அளவுக்கு இடம் அவர்களுக்கு ஒதுக்கி நீட் தேர்வு எழுதவும் அவர்களை அனுமதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்”.

இவ்வாறு பழ.நெடுமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.