‘ஓவர் தி டாப்’ என்று சொல்லப்படும் ஓடிடி தளங்கள்தான் திரைத்துறையின் எதிர்காலம். அவை வேகமாக வளர்ந்து வருகின்றன என்று இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துடன், மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் சேர்ந்து ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தை எடுத்துள்ளனர். நவரசம் எனப்படுகிற ஒன்பது உணர்ச்சிகளின் அடிப்படையில் ஒன்பது குறும்படங்களின் தொகுப்பாக ‘நவரசா’ உருவாகியுள்ளது.

கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், வஸந்த் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் பணியாற்றிய அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்து வருகிறார்கள். ஆகஸ்ட் 6ஆம் தேதி ‘நவரசா’ ஆந்தாலஜி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் மணிரத்னம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார்.

சமீபத்திய ஓடிடி வளர்ச்சி பற்றிப் பேசியிருக்கும் மணிரத்னம், “ஓடிடிதான் எதிர்காலம். வளர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்குப் பெரிய சாதகமான தளம். இரண்டு மணி நேரத் திரைப்பட வடிவத்துக்குப் பொருந்தாத பல சிந்தனைகள் உள்ளன.

நீண்ட நேரம் ஓடக்கூடிய அல்லது ஆந்தாலஜிகளை நாம் எடுக்கலாம். பெரிது, சிறிது என எல்லாவகையான கதைகளையும் சொல்ல ஓடிடி வழிவகுத்துள்ளது. இதனால் மாறுபட்ட கதைகள் மட்டுமல்ல, இயக்குநர்கள் படத்தை இயக்கும் விதத்திலும் மாறுதல்கள் கிடைக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.