கரோனா வைரஸுக்கு எதிராக தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் அஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அடுத்த வாரத்திலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு செய்ய உள்ளது.

இந்த இரு தடுப்பூசிகளின் செயல்திறன், கரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, எந்த அளவுக்குஉடலில் பாதிப்பைத் தடுக்கிறது ஆகியவை குறித்து முதல்முறையாக ஐசிஎம்ஆர் அமைப்பு ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னையில் உள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர் கூறுகையில் “ 45 வயதுக்கு மேற்பட்ட 4ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஐசிஎம்ஆர் அமைப்பு தடுப்பூசி குறித்துஆய்வு நடத்தப்பட உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என இருதரப்பினரிடம் பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர், அவரின் தடுப்பூசி நிலவரம் ஆகியவையும் கணக்கிடப்படும். இந்த ஆய்வின் நோக்கம் என்பது, கரோனா வைரஸை தீவிரம் அடையவிடாமல் தடுப்பூசி எந்த அளவு தடுக்கிறது, எந்த அளவுக்கு வீரியமாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளத்தான்.

நாட்டில் இரு தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அடுத்தவாரத்திலிருந்து தொடங்கலாம்.
கரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் எவ்வாறு செயல்படுகிறது, கோவாக்சின் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஒப்பீடும் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதுவரை நாட்டில் 20 கோடிருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும் தீவிரமாக தொற்றுஏற்படாமல், தடுக்கலாம், உயிரிழப்பைத் தடுக்கலாம் என்று கூறியுள்ளது. அதேசமயம் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று மத்தியஅரசு அறிவுறுத்தி வருகிறது.