விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்.

விழுப்புரம்

சாதி சான்று இல்லாததால் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள் ளியில் 7 மாணவிகளுக்கு சேர்க்கைமறுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதி மலைக்குறவன் சமூகத்தையை சேர்ந்த 28 மாணவ,மாணவிகள் சாதி சான்று கேட்டு கடந்த 2015-ம்ஆண்டில் விழுப்புரம் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் மனு கொடுத் தனர். இதில் 15 பேருக்கு சாதி சான்று வழங்கப்பட்டது. மீதமுள்ள 13 பேருக்கு இதுவரை சான்று வழங்கவில்லை.

இதுசம்பந்தமாக அவர்கள் தங்கள் பெற்றோருடன் பலமுறை விழுப்புரம் கோட்டாட்சியர் அலு வலகம், ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அவர்களுக்கு சாதி சான்று வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு 8 மற்றும் 9-ம் வகுப்புகள் முடித்த மாணவிகள் 7 பேர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இருந்து விலகி இந்தாண்டு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் சேர நேற்று மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆனால் அந்த விண்ணப்பத்துடன் சாதிசான்று வழங்கவில்லை. இதனால் அவர்களை பள்ளியில் சேர்க்கை செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அம்மாணவிகள், தங்களுக்கு சாதி சான்று வழங்காத கோட்டாட்சியரை கண்டித்து பள்ளியின் முன்பு கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் , விழுப்புரம் காந்தி சிலை அருகில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு சாதி சான்று உடனடியாக வழங்க வேண்டும். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்களை சேர்க்கை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இத்தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீஸார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியில் சேர்க்கை செய்யவும், சாதி சான்று கிடைக்கவும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். அதன் பின்னர் மாணவிகள், மறியலை கைவிட்டனர்.

இதுதொடர்பாக வருவாய் துறையினரிடம் கேட்ட போது, “விழுப்புரம் மாவட்டத்தின் பூர்வீக பழங்குடியினரில் இருளர் பிரிவினர் மட்டுமே உள்ளனர். விண்ணப்பித்த 28 மாணவர்களில் உரிய பரிசீலனைக்குப் பின் 15 பேருக்கு இருளர் என்ற பிரிவில் சாதி சான்று வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 13 பேர் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தனர்.