வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,11 சிங்கங்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 9 வயது பெண் சிங்கம் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இதனிடையே, மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வனத்துறை உயர் அதிகாரிகள் நேற்று (ஜூன் 05) பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள், தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ் ஆகியோர் விலங்குகளை பரிசோதித்தனர். அப்போது பூங்காவில் உள்ள சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (ஜூன் 06) முதல்வர் மு.க.ஸ்டாலின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொற்று பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மற்ற விலங்குகளை தனிமைப்படுத்துவது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பூங்கா ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.