“சென்னை இன்று முதல் 348 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அதற்குள்ளேயே மக்களை இயங்க வேண்டும், ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, அவ்வாறு செல்ல இ-பதிவு கட்டாயம். இ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் கரோனா தொற்றுப்பரவல் மொத்த தமிழக பரவலில் 25% என்கிற அளவில் உள்ளது. தினசரி உயிரிழப்பும் மொத்த தமிழக அளவில் 20% லிருந்து 25% ஆகp பதிவாகிறது. சென்னையில் 80 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கும் நிலையில் ஊரடங்கை மதிக்காமல் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டத்தை குறிப்பிட்ட பகுதிக்குள்ளேயே சுருக்கி கண்காணிக்கும் புதிய முறையை அமல்படுத்தியுள்ளனர். சென்னையை 348 செக்டார்களாக பிரித்து அதற்குள்ளேயே சென்று வர இ-பதிவு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

“கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த மே.18 (இன்று) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு. காலை 10.00 மணி முதல் பொதுமக்கள் சரக எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு அவசியம்.

தமிழக அரசின் கரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், மே.18 முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து செக்டார்களாக ஏற்படுத்தி அப்பகுதியிலேயே வசிக்கும் மக்கள் அவர்களுக்கு வேண்டிய காய்கறி, உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி காலை 06.00மணி முதல் 10.00மணி வரை மட்டுமே மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர்.

சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

கீழ்கண்ட கட்டுபாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது:

* அரசால் அனுமதிக்கப்பட்ட (காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை) நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-விண்ணப்பம் பதிவு செய்து அனுமதி பதிவு பெற்றிருக்க வேண்டும்.

*இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

* ஒவ்வொரு காவல் நிலைய எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து உரிய சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, செக்டார்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*இவ்வாறு, சென்னை பெருநகரில் 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

*பொதுமக்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*மறு காவல் நிலைய எல்லைக்குச் செல்பவர்கள் உரிய இ-பதிவு செய்திருக்க வேண்டும். இ-பதிவு செய்யாதவர்கள் மற்றொரு செக்டார் பகுதியில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

*சென்னை பெருநகரில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள 181 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணித்தும் தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

*நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் (Containment zone) இருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னை நகரில் 205 இருசக்கர ரோந்து வாகனங்களும், 309 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் உரிய போலீஸார் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு காவல் நிலைய ரோந்து வாகனங்கள் குறிப்பிட்ட முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

*அவசர மருத்துவ சிகிச்சை, மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

*பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்திடும் பணியினை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் முன்களப்பணியாளர்கள், காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு சென்னை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.