ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடர் தற்போது தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில் போட்டிகள் நடைபெற உள்ளது. 
இதனால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ்

இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில்  இந்தியா உள்ளிட்ட  சில நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வரும் தடகள வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது, ஒரு வாரத்திற்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என பெற்ற பிறகே ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.