தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூன் 05) வெளியிட்ட அறிவிப்பு:

“வெப்பச் சலனம் மற்றும் குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடக கடலோரப் பகுதி முதல் தென்தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும்,

இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 6 அன்று தமிழ்நாட்டின் ஒருசில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 7 அன்று, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 8, 9 அன்று, தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் 12, புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் 9, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் 8, மதுரை மாவட்டம் பேரையூர் 7, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தலா 6, பெரம்பலூர், தருமபுரி மாவட்டம் ஹரூர் தலா 5, கொடைக்கானல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தேனி மாவட்டம் பெரியாறு, தளி தலா 4.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 8, 9 அன்று கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பு: தென்மேற்குப் பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.