கரோனா சிகிச்சைக்காக ரூ.50 லட்சம் செலவில் 330 ஆக்சிஜன் உருளைகளை, ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் சாகுல் ஹமீது தமிழக அரசிடம் வழங்கினார்.

கரோனா 2-வது அலையில் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்க மாநில அரசு பலவித முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே அமீரகத்தில் இயங்கும் நோபல் மரைன் குழும மேலாண்மை இயக்குநரும், அமீரக தமிழ் மக்கள் மன்ற சமுதாயப் புரவலருமான தொழிலதிபர் ஹாஜி.சாகுல் ஹமீது, ரூ.50 லட்சம் மதிப்புள்ள 330 ஆக்சிஜன் உருளைகளை அமீரகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

சாகுல் ஹமீது அனுப்பிய உதவிகள் தமிழக அரசிடம் சென்றடைந்தது. பின்னர், அதற்கான தமிழக அரசின் அத்தாட்சிக் கடிதத்தை நோபல் குழுமம் சார்பில் வழக்கறிஞர் ஜே.எம்.எச்.இம்ரான் ஹாருன் பெற்றுக்கொண்டார். அந்த அத்தாட்சி சான்றை சேப்பாக்கம்- திருவல்லிகேணி எம்எல்ஏ உதயநிதியிடம் காண்பித்து அவர் வாழ்த்து பெற்றார்.