தனது மகளின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியதற்குத் தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் நேற்று (ஜூன் 27) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் கரோனா பாதுகாப்பு கருதி மணமகன் – மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்ததிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தனது மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கி, எனது மகள் திருமணத்தில் கலந்து கொண்டதோடு, அதை ஒரு மறக்கவியலா ஆசீர்வாதமாக மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணமக்களை ஆசிர்வதித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.