பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்.30) மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார்.

பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்கு கிடைத்தது.

பிறகு 1996ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநராக அவதாரமெடுத்தார். ஆனால் 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய ‘அயன்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து 2011ஆம் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னிறுத்தியது.

இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் விவேக்கின் மறைவு ஏற்படுத்தியே இன்னும் விலகாத நிலையில் தற்போது கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.