தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா? ரத்து செய்வதா? என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

கரோனா முதல் அலை பரவிய நேரத்தில் பிளஸ் 2 தேர்வு பெரும்பாலும் முடிந்து ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடந்த நிலையில், பின்னர் மற்ற தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் திடீரென ஏப்ரல் மாதம் முதல் இரண்டாம் அலை வேகமாக அதிகரித்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மறுபடியும் மூடப்பட்டன. தேர்வுகளும் நடைபெறவில்லை.

தமிழகத்தில் கரோனா தொற்று உச்சமாக 36,000 வரை அதிகரித்தது. தற்போது ஊரடங்கு அமலான நிலையில் 25,000க்கும் கீழ் குறைந்து வந்தாலும் மாவட்டங்களில் பரவல் குறையவில்லை. இந்திய அளவிலும் தொற்று அதிகமாக உள்ள நிலையில் கரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து சமீபத்தில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தியபின் அறிவிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பின்னர் ஆலோசனை நடத்திய அவர், கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டபின் ஓரிரு நாளில் முடிவெடுப்போம் எனத் தெரிவித்தார்.

அதற்காக தனி இணையதளம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டு, கருத்துகளை மாவட்ட வாரியாத் திரட்டி அனுப்பும்படி மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யக்கூடாது என அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது என அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வை நடத்தலாமா, மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்று ஏற்படாமல் தேர்வை நடத்த என்ன செய்வது, ஆன்லைனில் தேர்வு நடத்துவதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் தேர்வு ரத்து செய்யப்படுமா? நடத்தப்படுமா? நடத்தப்படும் எனில் எவ்வகையில் நடத்துவது என்பது குறித்து தமிழகம் முழுவதும் பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.