மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று சூர்யா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. கரோனா தொற்று ஏற்பட்டதால் இதன் படப்பூஜையில் சூர்யா கலந்து கொள்ளவில்லை. கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி வீட்டில் ஓய்வில் இருந்தார் சூர்யா.

மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். தற்போது பாண்டிராஜ் படப்பிடிப்புத் தளத்திலிருந்து சூர்யா தனது ட்விட்டர் பதிவில், “மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை சூர்யா ரசிகர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்திலும், ‘வாடிவாசல்’ படத்திலும் மாறி மாறி நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.