பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை உள்பட 10 சதவீத போனஸ் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து மாதந்தோறும் ரூ.7000 முதல் அதிகபட்சமாக 21,000 வரை ஊதியம் பெறும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு இந்த போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழக அரசு ரூ.216 கோடி ஒதுக்கீடு செய்து, 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டும் 10 சதவீத போனஸ் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.