வடசென்னை அனல் மின் நிலைய கொதிகலன்களில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் என, 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2-வது நிலையின் இருஅலகுகளின் கொதிகலன்களில் நேற்று பழுது ஏற்பட்டது. ஆகவே, அந்த அலகுகளில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுஉள்ளது.

கொதிகலன்களில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணிகளில் மின்ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பணி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு, 1,200 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.