கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்னையில் 312 வாகனத் தணிக்கை சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அதில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி இயக்கப்பட்டது தொடர்பாக, 1,112 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள், 40 இலகுரக வாகனங்கள் மற்றும் 4 இதர வாகனம் என மொத்தம் 1,205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 29 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 5 இலகுரக வாகனங்கள் மற்றும் ஒரு இதர வாகனம் என 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், முகக்கவசம் அணியாமல் சென்ற 3,174 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 34,800 வசூலிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசியத் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.