தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 2 காவல் ஆணையரகங்களை புதிதாகத் தொடங்கியது உட்பட 13 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இடையில், தாம்பரம், காஞ்சிபுரம், சிவகாசி, கடலூர், கும்பகோணம், கரூர் ஆகிய 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் தொடர்பான சட்ட மசோதாக்களை அமைச்சர் கே.என்.நேரு நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, நகர ஊரமைப்பு சட்டத்தில் நிலம் அல்லது கட்டிட மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கான காலஅளவை ஐந்திலிருந்து 8 ஆண்டுகளாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்தார்.

பேரவைக் கூட்டத்தில் இறுதிநாளான நேற்று சென்னை மாநகர காவல் சட்டத்தை, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஆவடி, தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்விளை பொருள் சந்தைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி, நிதி ஒதுக்க சட்ட மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இதுதவிர, தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளஅதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு வழி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (கூடுதல்செயற்பணிகள்) சட்ட மசோதவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் நேற்றே பிரிவு வாரியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.