2022ம் ஆண்டுநடக்கும் 15-வது ஐபிஎல் டி20 சீசன் சென்னையில் ஏப்ரல்-2ம் தேதி தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்று தெரிகிறது.

15-வது ஐபிஎல் டி20 சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த 10 அணிகளுக்கான ஏலம் அடுத்த மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

15-வது ஐபிஎல் சீசனில் அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 15-வது சீசனுக்கான ஐபிஎல் அட்டவணை தயாராகவில்லை என்றாலும் ஐபிஎல் அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ சார்பில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது

இரண்டு புதிய அணிகள் வந்திருப்பதால் ஐபிஎல் தொடர் வழக்கமாக 2 மாத அளவு நடைபெறுவது 60 நாட்களையும் தாண்டிச் செல்லும் என்று தெரிகிறது. இறுதிப் போட்டி ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது. தற்போதைய வடிவத்தின் படி ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆடும், 7 போட்டிகள் சொந்த மண்ணில் 7 போட்டிகள் வெளி மண்ணில் ஆட வேண்டும்.

ஐபிஎல் 2021 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளதால் சென்னையில் முதல் போட்டி நடைபெறும். எதிரணி வழக்கம் போல் மும்பை இந்தியன்ஸ் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் 2020 முழுதும் யுஏஇயில் நடைபெற, ஐபிஎல் 2021 தொடர் பாதி இந்தியாவிலும் பாதி யுஏஇயிலும் நடைபெற்றது. 2022 சீசன் முழுதும் இந்தியாவில் நடைபெறும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதற்கான மெகா வீரர்கள் ஏலம் டிசம்பரில் நடைபெறும் என்று தெரிகிறது.