நவம்பர் மாதத்திலும் சரக்கு மற்றும் சேவை வரி ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 5-வது மாதமாக வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபின், இந்த ஆண்டு நவம்பரில் வசூலாகிய ரூ.1.31 லட்சம் கோடிதான் 2-வது அதிகபட்சமாகும். கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியது. கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1.30 லட்சம் கோடி வசூலாகியநிலையில் அதைவிட கடந்த மாதம் கூடுதலாக வசூலாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 526 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 5-வது மாதமா ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயைவிட 25 சதவீதம் கூடுதலாகவும், 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தைவிட 27 சதவீதமும் கூடுதலாக இந்த ஆண்டு வரி வசூலாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 5 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரிதான் 2-வது அதிகபட்சமாகும். ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி எட்டியது. ஜூலையில் ரூ.1.16லட்சம் கோடியும், ஆகஸ்டில் ரூ.1.12 லட்சம் கோடியும், செப்டம்பரில் ரூ.1.17 லட்சம் கோடியும், அக்டோபரில் ரூ.1.30 லட்சமும் வசூலாகியது.

நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 526 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.23 ஆயிரத்து 978 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.31 ஆயிரத்து 127 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.66 ஆயிரத்து 815 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 606 கோடி கிடைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக இருக்கிறது. இது முதல் காலாண்டில் சராசரியாக ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. முதல் காலாண்டைவிட 2-வது காலாண்டில் சராசரி வருவாய் 5 சதவீதம் அதிகரித்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.